சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

19 Nov 2015

'எல்லாம் இருந்தும் எதுவுமில்லை..!'- வெள்ளத்தில் சிக்கிய வாசகியின் வேதனை அனுபவம்

சினிமாக்களிலும் நாடகங்களிலும் நொடிப் பொழுதில் காட்சிகள் மாறுவதுபோல, நிஜ வாழ்விலும் காட்சிகள் நொடிப் பொழுதில் மாறித்தான் போகின்றன.
ஏழு நாட்களுக்கு முன், கடலூர் பகுதியின் வெள்ள நிலவரத்தை பட்டாணியை கொறித்தபடி டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த நான், கொஞ்சம்கூட நினைத்தும் பார்க்கவில்லை, அடுத்த வாரம் எங்கள் பகுதிக்கும் இப்படியொரு நிலைமை வருமென்று!

கனமழையால் முடிச்சூர் ரோடு, பாரதி நகரில் உள்ள எங்கள் வீட்டைச் சுற்றி இடுப்பளவு தண்ணீர். வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர். மாடியில் தஞ்சமடைந்தோம். மூன்று நாட்களாக கரண்ட் கிடையாது. வீட்டுக்குள் மழைநீர் தேங்கிக்கிடந்தாலும், குடிக்கத் தண்ணீர் கிடையாது. மழைநீரைப் பிடித்துக் குடித்தோம். ஹெலிகாப்டரில் ரவுண்ட் வந்த மீட்புக் குழுவினர், உணவுப் பொட்டலங்களை எங்கள் பகுதியில் வீசினார்கள். ஹெலிகாப்டர் கண்ணில் பட்டபோதெல்லாம் “ தண்ணீர்... தண்ணீர்..." என்று நாங்கள் கத்தியும், சைகை செய்தும் கண்டுகொள்ளவே இல்லை.

பக்கத்து வீட்டின் மொட்டை மாடியிலிருந்த ஒருவர், “ நீங்க தண்ணீர் என்று சைகை செய்வதை அவர்கள் சாப்பாடு என்று நினைத்து அந்த பாக்கெட்டை இங்கே போட்டுவிடப் போகிறார்கள். தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு தூக்கி காட்டுங்கள்" என்று ஒருவர் யோசனை சொல்ல, அப்படியே செய்தோம். ஊஹூம்..... ஹெலிகாப்டர் எங்களை கண்டு கொள்ளவே இல்லை. அவர்களையும் குற்றம் சொல்லமுடியாது. ஒரே நேரத்தில் ஒட்டு மொத்த பகுதியும் பாதிக்கப்படும்போது யாரையென்று அவர்கள் கவனிக்க முடியும்.

பால் வண்டி வர முடியாததால் பால், தயிர் கிடையாது. என்னைப் பற்றி கவலை கிடையாது. 90 வயதைத்  தாண்டிய அம்மா,  வீட்டில் எத்தனை விதமான உணவு வகை இருந்தாலும் இட்லி தோசைக்கும், சாதத்துக்கும் தயிரை மட்டுமே கேட்பார். ஆனால், நிலைமையைப் புரிந்து கொண்டு “எனக்கு தயிர் வேண்டாம். குளிராக இருக்கிறதே.... இட்லி மிளகாய்ப் பொடிக்கு எண்ணையே போதும் “ என்று சொன்னபோது மனதில் ஒரு வலி.
சென்னையில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது நானும் என் சகோதரியும், அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து போர்வை, புடவை, துணிமணிகளை கலெக்ட் பண்ணிக்கொண்டு,  குறைந்தது நூறு பிஸ்கட் பாக்கெட், பன் என்று வாங்கிக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அங்கு போய்க் கொடுத்து விட்டு வந்தோம். கொடுக்கத்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, நாங்கள் ஆட்டோவிலிருந்து இறங்கும் முன்பாகவே சிலர் ஓடி வந்து, எங்கள் கையிலிருந்த துணிகளை பறித்து சென்றார்கள். அவர்கள் நிலையை நினைத்து மனம் அழுதது. 

இவ்வளவுக்கும் அவர்கள் நேற்று வரை நல்ல நிலையில் இருந்து, இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு, இன்று இந்த நிலையில் இருக்கிறார்களே என்று நினைக்கும்  போது மனதுக்குள் ஒரு வலி தோன்றியது. புயல் ஒரே நாளில், மனிதர்களின் வாழ்வை புரட்டிப்போட்டுவிட்டது. சிலசமயம் தொலைக்காட்சி செய்திகளில், புயல் சூழ்ந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வீச, மற்றவர்கள் அதை ஓடி ஓடிப் பிடிக்கும்போது, “எப்பேர்ப்பட்ட வசதி உள்ளவர்களையும் ஒரு நொடிப் பொழுதில் பிச்சைக்காரகள் ஆக்கி ஆண்டவன் வேடிக்கை பார்க்கிறானே” என்று நினைப்பேன்.

ஒரு சில விஷயங்களை நாம் கற்பனை செய்துகூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது நிஜ வாழ்வில் நடந்து விடுகிறது.
எங்கள் பகுதிக்கு படகு வந்து  விருப்பப்பட்டவர்களை வெளியிடத்துக்கு கூட்டிச் சென்றது. அவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அந்த உணர்ச்சி மிகுதியில் குறைந்தது 10 பேரையாவது என் வீட்டில் வைத்துப் பராமரிக்க மனம் எண்ணியது. ஆனால் நாங்களே,  'மாடிக்கு எப்போது தண்ணீர் வருமோ தெரியலையே...' என்ற பயத்தில் இருக்கும்போது, எதை நம்பி அவர்களை வீட்டுக்குள் அழைக்கமுடியும்? ஏதாவது முகாமுக்குப் போனால், இவர்களுக்கு சாப்பாட்டை ஏதோ ஒரு வகையில், யாரோ ஏற்பாடு செய்வார்கள். இங்கே வந்து, நம்மோடு சேர்ந்து தண்ணீர் இல்லாமல் இவர்களும் ஏன் தவிக்க வேண்டும்  என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

எங்கள் பகுதிக்குள் வந்த படகுக்காரர்களிடம் 'பால், தண்ணீர் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம்' என்றோம். 'கடை எதுவுமே திறந்திருக்கவில்லையே' என்று கைவிரித்துவிட்டனர். உண்மைதான். தோழிகளோடு வெளியிடங்களுக்கு செல்லும்போது தோழிகள் என்னிடம் மட்டும் “ அது வேண்டுமா... இது வேண்டுமா?” என்று விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். அதைப் பார்க்கும் சிலர், “அது என்ன அவங்களுக்கு மட்டும்  ஸ்பெஷல் உபசரிப்பு?” என்று கேட்கும்போது, “நாம வேணும்ங்கிறதை கேட்டு வாங்கி சாப்பிடுவோம். அவங்க கேட்க மாட்டாங்க. கூச்சப்படுவாங்க” என்று தோழிகள் சொல்வார்கள்.

ஹெலிகாப்டரைப் பார்த்து நான் “தண்ணீர்...” என்று கேட்டு சைகை செய்தபோது, இந்த காட்சி என் கண்முன் விரிந்தது. “அய்யோ.. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண நம்ம நட்பு வட்டங்கள் பக்கத்தில் இல்லாமல் போயிட்டாங்களே...!” என்று வருத்தப்பட்டேன்.
இரண்டு நாட்கள் பால் இல்லாத காப்பியை அம்மாவுக்கு கொடுத்தாகி விட்டது. இன்றைக்கும் அதே நிலை என்றால் அம்மா தாங்க மாட்டாள் என்று மனதிற்குள் குமைந்துகொண்டிருந்தேன். எனது குரல் கடவுளின் காதில் விழுந்து விட்டது போலும். இன்று ஒரு லாரியில் “ஆரோக்கியா” பால் பாக்கெட்டுகளை எங்கள் பகுதியில் இலவசமாக சப்ளை செய்தார்கள். பால் பாக்கெட் கொடுத்த அவர்கள்,  'சாப்பாடு வேண்டுமா...?" என்று கேட்டார்கள். "சாப்பாடு வேண்டாம்... தண்ணீர் கொடுத்தால் நன்றாக இருக்கும்!" என்று நான் சொல்ல, "அடுத்த வேனில் அதைக் கொண்டு வருகிறோம்" என்றார்கள். 

பாக்கெட் பால் என் கையில் வந்தபோது, என் கையில் யாரோ கோடி கோடியாகக் காசுகளை கொட்டியது போன்ற உணர்வு ஏற்பட்டது. இக்கட்டான நேரத்தில் உதவிய அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும். சற்று நேரத்திலேயே கரெண்ட் வந்தது. விடுவிடுவென தொட்டிக்கு தண்ணீரை ஏற்றி விட்டோம். 

இதில் கொடுமை என்னவென்றால் எல்லா இடத்து பாதிப்புகளையும் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்த நான், எங்கள் பகுதி வெள்ள நிலவரத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. தொலைக்காட்சிகளை பார்த்த வெளியூர் உறவுகள், உள்ளூர் நட்பு வட்டங்கள் என்னை மொபைலில் தொடர்பு கொண்டு கேட்ட முதல் கேள்வி,  “ இப்பத்தான் டீ.வியில பார்த்தோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க... சாப்பிட்டீங்களா ?“ என்பதுதான்.

அத்தனை பேருக்கும் நான் சொன்ன ஒரே பதில், “ருசியாக செய்து சாப்பிட வழியில்லை என்றாலும் பசிக்கு சாப்பிட தேவையான பொருள் இருக்கிறது. காய்கறி இல்லை. ஆனால் அப்பளம் இருக்கிறது. உங்களால் முடிந்தால், மின்சாரம், தண்ணீர், பால் இந்த மூன்றுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க “ என்பதுதான்.  

மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது எனக்கொன்றும் புதிதல்ல. ஆனால் நம்மை நம்பி  நம்மோடு இருப்பவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்க வழியில்லாத நிலையில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் மழை மீது கோபம் வந்தது. 

ஒரு ராஜாவின் மகனுக்கு, அதாவது ஒரு இளவரசனுக்கு பன்றியால்தான் மரணம் நேரும் என்று ஜோதிடர் சொல்ல, "என் மகன் பன்றி இருக்கிற இடத்துக்குப் போக வாய்ப்பே இல்லை. பிறகு எப்படி மரணம் நேரும்?" என்று கேட்டு கோபப்பட்ட ராஜா,  அந்த ஜோதிடரை தூக்கில் போடவேண்டுமென்று சொல்ல, அதற்கு ஜோதிடர், “ நான் குறிப்பிடும் அந்த வயதில் அவர் பன்றியால் மரணமடையாமல் உயிரோடு இருந்தால் அதன் பிறகு என்னை தண்டியுங்கள்” என்று சொல்ல, ராஜாவும் சம்மதித்து ஜோதிடரை சிறையில் வைத்தார். 

முடிவில் ஜோதிடர் சொன்னது நடந்தது. அந்த நாட்டுக் கொடியில் உள்ள சின்னம் பன்றி. காற்றில் கொடிக்கம்பு உடைந்து, அரண்மனை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் மீது விழ, கொடியிலிருந்த தங்கப் பன்றி இளவரசன் நெஞ்சில் குத்தி அவன் இறந்து போனான். இதுதான் விதியின் செயல்.

இப்படித்தான் தனுஷ்கோடி புயலின்போது, நடிகர் ஜெமினி கணேஷ் - சாவித்திரி தம்பதியர் தங்கள் மகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்குள் மாட்டிக் கொண்டனர். அதுபற்றி பின்னர் பேட்டியளித்த ஜெமினி, “எங்கள் வீட்டில் எத்தனையோ பேருக்கு தினம் தினம் சாப்பாடு கிடைக்கும். நாங்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நாள் ஒன்று வரும் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை“ என்று சொல்லியிருந்தார்.

அப்படித்தான் வானத்தில் பறக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்துக் நாங்கள் கைக் காட்டி, தண்ணீரும் சாப்பாடும் கேட்க வேண்டும் என்ற ஒரு கணக்கை ஆண்டவன் எப்போதோ போட்டு வைத்திருக்கிறான் போலும்   .

எல்லாம் இருந்தும் தற்காலிகமான இந்த நிலைக்கே நாம சுய பச்சாதாபம் அடைகிறோமே. எல்லாம் இருந்தும் ஏதோ ஒரு காரணத்துக்காக அகதிகளாக வேறோர் இடத்தில் தஞ்சம் அடைந்து, எது நிரந்தரம் என தெரியாமல் தவிப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கும்போதுதான் துயரம் மேலோங்குகிறது. 


No comments:

Post a Comment