சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Nov 2015

'பகலிரவு டெஸ்ட்'- எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 6 விஷயங்கள்!

லகில் அதிகம் பேர் தொலைக்காட்சி வாயிலாக ரசிக்கும் விளையாட்டு எது தெரியுமா? கால்பந்து, டென்னிஸ் போட்டிகளுக்கு அடுத்ததாக கிரிக்கெட்தான். அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் இன்னும் கிரிக்கெட்டில் பெரிய அளவில் கால்பதிக்கவில்லை. ஆனால் உலகில் அதிக மக்கள் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்கின்றனர் என்கிறது புள்ளிவிவரங்கள். ஏனெனில் கிரிக்கெட் உடல் மற்றும் மனஉறுதி ஆகிய இரண்டையும் சோதிக்கும் அற்புத விளையாட்டு. எதிர்பார்க்கவே முடியாத பல ஆச்சர்யங்கள் கிரிக்கெட்டில் நிகழும்.
 
பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், வார்னே, லாரா, காலிஸ், சேவாக், தோனி, டி வில்லியர்ஸ் என பல ஜாம்பவான்கள் கோலோச்சிய விளையாட்டு இது. சச்சின் டெண்டுல்கருக்கு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்திலும், லாராவுக்கு ஆஸ்திரேலியாவிலும், டி வில்லியர்ஸ்க்கு இந்தியாவிலும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்புகள் வரலாற்று சிறப்புமிக்கவை. தனது நாட்டை தாண்டி மற்ற நாட்டு வீரர்களையும் ரசிக்கும், ஆராதிக்கும், கொண்டாடும் மன நிலை கொண்டவர்கள் கிரிக்கெட் ரசிகர்கள். ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் மறைந்தபோது ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் கண்ணீர் வடித்தது.

ஸ்லெட்ஜிங்கை ஆயுதமாக பயன்படுத்தும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள், ஜென்டில்மேன் கிரிக்கெட் விளையாடும் தென் ஆப்ரிக்கா, இந்தியா, நியூசிலாந்து அணிகள், களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அணிகள் என களத்தில்  இத்தகைய அணிகள் போட்டியில் விறுவிறுப்பை கூட்டும். ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட், பின்னர் 60 ஓவர்கள் கொண்ட ஒருதின போட்டி, அதன் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட ஒருதினபோட்டி, பின்னர் டி-20 கிரிக்கெட் போட்டி என பல வடிவங்களில் கிரிக்கெட் மாறி வந்திருக்கிறது.

தற்போது நவீன டிஜிட்டல் யுகத்தில் புதிய மாற்றங்களுடன் தன்னை அப்டேட் செய்துகொண்டு புதிய வடிவத்தில் முத்தாய்ப்பாய் வந்திருப்பது தான் "பகலிரவு டெஸ்ட் போட்டிகள்". 138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக சர்வதேச அளவிலான டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கவுள்ளது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள  அடிலெய்டு மைதானத்தில் நாளை (27ம் தேதி) தொடங்கவுள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை   எகிற வைத்திருக்கும் 6 விஷயங்களை இனி பார்ப்போம்.

1. 'பிங்க்' நிற பந்து 
பொதுவாக கிரிக்கெட்டில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பந்துகள்தான் பயன்படுத்தப்படும். ஆனால் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படவுள்ளது. குக்குபாரா நிறுவனம் இதற்கென பிரத்யேகமாக பந்துகளை தயாரித்துள்ளது. பிங்க் நிற பந்துகள் குறித்து ஆதரவும், எதிர்ப்பும் என பல சர்ச்சைகள் சுற்றியுள்ளது. இந்நிலையில்தான் இந்த போட்டியில் பிங்க் நிற பந்தின் மாயஜாலம் வெளிப்படவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் வெள்ளை நிற ஜெர்சியைதான் வீரர்கள் அணிய உள்ளனர். இரவு நேரத்தில் பிங்க் பந்துகளை பேட்ஸ்மேன்களும், பீல்டர்களும் எவ்வாறு எதிர்கொள்ள உள்ளனர் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
 
2. பேட்டிங்க்குக்கு சாதகம்? 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் அதன் சிறப்பம்சம் என்னவெனில் பேட்டிங், பவுலிங் இரண்டுக்கும் சமவாய்ப்பு இருக்கும். பகலிரவு போட்டிகளை பொறுத்தவரையில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருந்தால், அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் குஷியாகிவிடுவார்கள். பொதுவாக காலை நேரத்தில் முதல் ஒரு மணிநேரம் மைதானம் பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்கும். ஆனால் இப்போட்டி மதியத்துக்கு மேல்தான் தொடங்கும் என்பதால் மைதானத்தில் வெயில் பட்டால், பிட்ச் கடினமாகிவிடும். இந்நிலையில் பேட்டிங் சிறிது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே தொடக்க வீரர்கள் அதிக ரன்களை குவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

3. பொதுமக்களிடம் வரவேற்பு?


அந்தக்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது மைதானம் பார்வையாளர்களால் நிரம்பி வழியும். ஆனால், இப்போது டெஸ்ட் போட்டிகளை பார்க்க, இந்தியா போன்ற நாடுகளில் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. பகலிரவு போட்டிகளாக நடக்கும்போது மாலை நேரத்தில் நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால் டிக்கெட்  விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டிவியில் இப்போட்டியை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதால்,  மிகப்பெரிய வணிக சந்தைக்கு வாசல் திறக்கிறது டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் டிவியில் போட்டிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கணித்திருக்கிறது ஐசிசி.
 
4. இரவு நேர 'ஸ்விங்'

இரவு நேரத்தில் பொதுவாக பந்துகள் மெல்ல மெல்ல ஸ்விங் ஆகும் தன்மை கொண்டது. இதனால் தடுப்பாட்டம் விளையாடுபவர்களுக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது. மிட்செல் ஸ்டார்க் நன்றாக பந்தை ஸ்விங் செய்வார் என்பதால்,  அவரை ஆஸ்திரேலிய அணி பெரிதாக நம்பியிருக்கிறது. எனவே, இப்போட்டியில் அனல் தெறிக்கும். அதே சமயம் இப்போட்டியில்  சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருக்கிறது.

5. டாஸ் முக்கியமில்லை?


பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும். ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்வது மிகப்பெரிய பங்கு வகிக்காது என சொல்லப்படுகிறது. ஏனெனில் இரவு நேரத்தில் பேட்டிங் ஈசியாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், முதல் இன்னிங்ஸில் விளையாட எந்த அணியும் பெரிய ஆர்வம் காட்டாது என்கின்றனர் கிரிக்கெட் வல்லுனர்கள். நிபுணர்கள் என்னதான் கணித்தாலும் கிரிக்கெட் போட்டி எந்த நேரத்திலும் மாறும் என்பதால், இந்த போட்டிக்கு பிறகுதான் டாஸ் முக்கியமா இல்லையா என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
 
6. லோக்கல் டிராக்  'அடிலெய்டு'

ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களில் முற்றிலும் வேறுபட்டது அடிலெய்டு மைதானம். அடிலெய்டு அப்படியே இந்திய துணைக் கண்டங்களில் இருக்கும் மைதானத்தை போன்றது. அதாவது முதல் மூன்று நாட்கள் பேட்டிங்குக்கு சாதகமாகவும், பின்னர் அடுத்தடுத்த நாட்களில் ஆடுகளம்  சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் மாறிவிடும். இந்த மைதானத்தில் கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள், கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடியது. இதில் இந்திய அணி,  நூலிழையில் மூன்று ஓவர்கள் தாக்குபிடிக்க முடியாமல் டிரா செய்யும் வாய்ப்பை இழந்து, தோல்வியை தழுவியது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வேகப்பந்துக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்திலேயே, கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு கடும் சவால் கொடுத்தது நியூசிலாந்து,  மேலும் இப்போட்டியில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாட முயற்சிக்கும்.

இந்த டெஸ்ட் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றால்,  படிப்படியாக எல்லா நாடுகளிலும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைமுறைக்கு வரும். ஆக ஆஸ்திரேலியா-  நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி 'தெறிமாஸ்' டெஸ்ட் போட்டியாக,  ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


No comments:

Post a Comment