சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jan 2013

மானசீகக் காதலி



ஒரு சாதாரணமான ஆண் தன் மனைவியில் தன் மானசீகக் காதலியைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்கிறான்.ஒரு சாதாரணமான பெண் தன் கணவனில் தன் மானசீகக் காதலனை தேடித்தேடிக்கண்டுபிடிக்கிறாள்.ஒரு ஆணைவிட பெண் தனது மானசீகக்காதலனை மிக மிக எளிதாகக் கண்டுபிடிக்கிறாள். காரணம் பல சமயங்களில் அவளின் எதிர்பார்ப்பு அவனிடம் அவளைச் சுற்றியும் அவனைச் சுற்றியும் மட்டும்தான். 

அவளுக்குள் அவனது தொலைபேசி அழைப்புகள் உலகிலேயே உன்னதமான இசையாகிவிடுகிறது. அவனது சாப்பிட்டாயா என்ற கேள்வி ஒரு பிரமாதமான விருந்தாகி மனம் நிறைக்கிறது. அவனது உன்னைத் தேடுகிறேன் என்ற வார்ததை இதயம் நனைத்து கண்களில் நீராய் வழிகிறது. 

எப்பொழுது 5 மணியாகும் எப்பொழுது அவர் வருவார் என்று கண்கள் எங்கிருந்தாலும் காதுகளும் இதயமும் கதவுகளில் காத்துக்கிடக்கின்றன. அந்த நேரத்தில் வீரிடும் ஒரு அழைப்பு மணி ஓசைக்கும், ஒரு கர்ணகடூர பைக்கின் ஓசைக்கும் இந்த உலகின் எந்த ஒரு இசையும் ஈடாகாது.


அந்தச் சாயங்காலப் பட்டாம்பூச்சிகள் இரவு முழுவதும் ஒரு மின்மினிப்பூச்சியாய் மனமெங்கும் மின்னும் அந்த அழகை அவளின் படபடக்கும் இமைகளிலும் மின்னும் அந்தக் கண்களிலும் காணலாம். 

கணவர்களே, அந்தப் பட்டாம்பூச்சிகளை பறக்கவிடுங்கள். இன்னும் சில நாட்கள் அவை பறக்கட்டும். சாயங்காலங்கள் தோளில் சாயுங்காலங்களாகட்டும், மாலைகள் மடிதேடும் தலைகளுக்காகட்டும்.மனைவிகளே,உங்களின் தலைகோதும் விரல்கள் முடிகளின் ஊடாய் மனங்களை வருடட்டும்.

விரல்களும் கரங்களும் கதை பேச மௌனங்களே வார்த்தைகளாக ஒரு அந்தி நேரம் குறுநகை கூடிய குறுநடைகளாகும் அந்த மாலைகளில் மனங்கள் பேசட்டும், இரவுகளில் உடல்கள் உரையாடட்டும். இரவுகள் ஒரு இசைக்கச்சேரியாகட்டும்.இரவுகளின் இருட்டுகளும் உறவுகளின் மௌனங்களும் இளம் காலைகள்கூட கொஞ்சம் நீண்டு வெளிச்சமாகிப்போன இரவுகளாகட்டும்.

காரணமில்லாத சில முத்தங்கள், மனங்கள் திட்டமிடா அணைப்புகள், தேவையில்லாத சில தீண்டி விலகல்கள்,உடல் கலக்கா சில உதடு சந்திப்புகள், சில செல்ல முடிபற்றியிழுத்தல்கள், பொறுக்கியாய் சில பின்பக்கத்தட்டல்கள், குளியலில் மறந்த துவாலைகளாய் மனைவிகள் ..இவையெல்லாம் அந்தப் பட்டாம்பூச்சிக்கு வண்ணம் சேர்க்கும் சிறகுகளை படபடக்க வைக்கும்.

அவளின் மார்புகளிலும் தோளிலும் ஈரமுகம் பதித்து துடைத்துவிட்டு நீங்கள் செல்வீர்களே கணவர்களே, அந்த ஈரம் ஒரு துளிகுறையாது அவளின் மனம் இறங்கி குளிர்விக்கும்....அந்த குளிர்தடாகத்தில் மலராய் மனது மலர, சிறகடித்து வண்ணத்துப்பூச்சிகள் பறக்க ஒரு நந்தவனத்துச் சீதையாய் அவள் உங்களுக்காய் சிதையிறங்கவும் தயாராக இருப்பாள்.....அவற்றிற்கு காதல் வார்த்தைகள்தான் உணவுகள். காசு செலவில்லை காதல் தானே செலவாகும் போகட்டும்.அது ஒரு சாகா நதிதானே..கொஞ்சம் மொண்டு ஊற்றுங்களேன்.


மல்லிகைப்பூவாய் இட்லிகளும் ருசியாய் சில சட்னிகளால் எண்ணிக்கையில்லாமல் இறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கொஞ்சம் தண்ணீர் குடிக்கும் இடைவெளியில் சொல்லுங்களேன் "அரிசியுடன் மல்லிகையைக் கலந்து அரைத்தாயா" என்று? (இல்லை பாக்கெட் மாவு போட்டவனைத்தான் கேட்கணும் என்று பதில் வந்தால் நான் ஜூட்)

வாழ்க்கையில் கொஞ்சம் கவிதை சேருங்கள். காதலில் கொஞ்சம் பொய் சேருங்கள். பொய்யானாலும் வேண்டும் என்று கேட்கும் பெண்ணின் மனம். ஆனால் மறந்தும் பொய்யில் காதலை சேர்த்துவிடாதீர்கள். திருமணத்திற்கு முன்பிருந்த கவர்ச்சி நாணம் ஆசையெல்லாம் போவதின் முதல் காரணம் மேற்சொன்ன பலவற்றை மறப்பதுதான்
..

No comments:

Post a Comment