சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Jan 2013

மதுரை மீனாட்சியம்மன் கோயில்



     
          என் அலுவலக நண்பர் திரு.ராஜா அவர்களின் திருமணத்திற்கு நான் மற்றும் எனது நண்பர்களுடன் மதுரை சென்றோம்.முதல் நாள் இரவு மதுரை சென்றடைந்து  திருமண மண்டபத்தில் தங்கிவிட்டு அடுத்த நாள் மீனாட்சி அம்மன் கோவில் சென்றோம். நான் இந்த கோவிலுக்கு இரண்டாவது முறை செல்கிறேன். ஆகவே எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

       நாங்கள் சென்ற வாகனத்தை பார்க்கிங்கில் போட்டுவிட்டு நடந்து சென்றோம். நாங்கள் சென்ற நேரம் முற்பகல்.ஆயினும் வெய்யில் மண்டையை பிளந்தது.கால்கள் வெந்து நொந்து நூலானது.கோவிலுக்குள் ஓரளவு மட்டுமே கூட்டம் இருந்தது.அங்கங்கே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோவிலின் அமைப்பை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.நம் மக்கள் அவர்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர். சரி அது எதுக்கு நமக்கு?கோவிலின் அமைப்பை பற்றி நான் அறிந்தவரை சொல்கிறேன்.

        மதுரை மீனாட்சியம்மன் கோயில் அல்லது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழ் நாட்டில் மதுரை நகரின்  மையத்தில் அமைந்துள்ள தொன்மையான இந்துக் கோவில் ஆகும். இங்கு மீனாட்சி அம்மனும் சுந்தரேசுவரரும் வழிபடப்படுகின்றனர். இருப்பினும் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கிவிட்டு அதன் பிறகு சுந்தரேசுவரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. சிவபெருமானுக்கான  கோவில்களில் இந்தக் கோயில் சிறப்புடைய ஒன்றாக கருதப்படுகிறது.


       முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான்  தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை  உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின்  அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
       மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும்  தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.

     சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான  பாம்பு   வட்டமாக தன் வாலை வாயினால்  கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர்  இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.
      விருத்தாசுரன் என்ற அசுரனை   வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

அமைவிடம் :
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும் , 64 சிவகணங்களும், 8  வெள்ளை யானைகளும்  இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள்  மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக்  கோபுரம் கி.பி 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும் மேற்கு கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும்,  தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும்  வடக்கு  கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார்  சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால்  முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி   முதலியாரால்  கி.பி. 1570-ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர்  சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு  ஏக்கர்   பரப்பளவில் பொற்றாமரைக்குளம்  அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபம்:
இக்கோயிலினுள் அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், முதலி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், கம்பத்தடி மண்டபம், கிளிக்கூட்டு மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், சேர்வைக்காரர் மண்டபம் போன்ற கலையழகு மிக்க மண்டபங்கள் இருக்கின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அவருடைய அமைச்சர் அரியநாத முதலியாரால்  இங்கு அமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் மிகச் சிறப்பு பெற்ற ஒன்றாகும். இம்மண்டபத்தில் 985 தூண்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. (இந்த புது மண்டபம் முழுவதும் சிறு   வணிக கடைகளாக  அமைக்கப்பட்டு உள்ளது.)
மீனாட்சி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக எட்டு சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர்  முருகன் உருவங்களுக்கு இடையே  மீனாச்சி கல்யாணம்  சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாட்சி நாயக்கர் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி ( பெண்பாலுக்கு சரிதானே)மீனாட்சி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில்  கிளியை  ஏந்தி அருட்காட்சி தருகிறார். சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர்  சிவலிங்க திருமேனியாக அருட்காட்சி தருகிறார்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை  மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை  வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால்  மாசி  வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழா  மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம்  புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்னும் நிறைய இருக்கிறது.இருந்தாலும் என் மற்றும் உங்களின் நேரம் கருதி எனது பதிவை சுருக்கி கொள்கிறேன்.

சிறப்புகள்:
1)சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத்  தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.
2) சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப்பாடலில்  குறிப்பிடுகிறார்.
3) சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
4) சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை  திருக்கேதாரம்  வாரணாசி  மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப்பாடலில்  குறிப்பிட்டுள்ளார்.
5) இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை  மரகதக் கல்லால்  ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மேலும் அங்கயற்கண்ணி , தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
6) ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.
7) இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்:  பொற்றாமரைக்குளம்  மற்றும்    வைகை . பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதினத்தில்  வழிபாட்டில் உள்ளது.
8) நவக்கிரங்களில் புதனுக்குரியதாக  கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
9) மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர  அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.
10) மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!





No comments:

Post a Comment