இமயமலைத் தொடரில் அமைந்துள்ள திருக்கயிலாய மலைக்கு, புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் உத்தர்காண்ட் மாநிலம் வழியாகவும், நேபாளம் வழியாகவும் சென்றுவருகின்றனர்.
சாலை வழியாக வாகனம் மூலம் செல்ல விரும்புபவர்கள் நேபாளத்தையும், மலைப் பாதை வழியே யாத்திரையாகச் செல்பவர்கள் உத்தர்காண்டையும் தேர்ந்தெடுப்பார்கள். தற்போது புதிதாக சிக்கிம் மாநிலத்தில் இருக்கும் ’நாது-லா பாஸ்’ சாலை திறக்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த சீன அதிபருடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிக்கிம் மாநிலம் வழியாகச் செல்லும் இந்தப் புதிய சாலை, வாகனங்களில் செல்பவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். யாத்திரை செல்பவர்களுக்கு உபயோகப்படாது என்கின்றனர்.
காரணம், நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதுடன், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலத்தவர்களுக்கு இந்தப் பாதை சுலபமாக இருக்காது என்கின்றனர். ஆனால், மோசமான வானிலை சூழல் ஏற்படும்போது, வயதான பக்தர்களுக்கு இந்த சாலை மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நாது - லா பாஸ் (கேட்கும் காதுகள் கணவாய்) எனப்படும் இந்தச் சாலை ’பழைய பட்டுப் பாதை’களில் ஒன்று. சீனத்து பட்டுத் துணி வணிகம் இந்த பாதை வழியாகத்தான் நம் நாட்டுக்குள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திபெத்தின் பிராந்தியமான இந்தப் பகுதி, சீனாவின் ஆளுகைக்குக் கீழ் சென்றதும் இந்த பாதை மூடப்பட்டது. தற்போது நடந்த பேச்சு வார்த்தைகள் மூலம் நாது-லா பாஸ் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
No comments:
Post a Comment