சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2014

பாப்பா பத்திரமா? - கர்ப்பம் கவனம்


‘ப்ளீடிங்’ பயம்


தாய்மை... ஒவ்வொரு பெண்ணும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் தருணம். கரு சுமக்கும் காலங்களில் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் வரும். சின்னதொரு மாற்றம் கூட, மனதளவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஒரு பெண்ணின் அனுபவம், இன்னொரு பெண்ணுக்கு இருப்பது இல்லை.

ஒரு பெண் தாய்மை அடைந்ததற்கான முதல் அறிகுறி, மாதவிலக்கு நின்று போவதுதான். அப்படி இருக்கும்போது கருவுற்ற காலங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு, பெண்களை பயங்கரப் பதற்றத்துக்கு உள்ளாக்கிவிடும். 'ரத்தப்போக்கு இருந்தாலும் குழந்தை நலமாய் இருக்கிறதுஎன்கிற டாக்டரின் ஆறுதல், மீண்டும் அடுத்தமுறை ரத்தம் பார்க்கும்போது மறந்துபோகும். பதற்றம் பரவும்.  இது ஏன் ஏற்படுகிறது?




சுஜா திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கருவுற்றபோது, குடும்பமே அதைக் கொண்டாடியது. ஆனால் இரண்டாவது மாதத்தில் திடீரென கொஞ்சம் ரத்தம் வெளியேறியபோது, சுஜா பயந்து போனாள். அது பிரமையோ என்கிற குழப்பத்தில் யாரிடமும் சொல்லாமல்விட, அன்று மாலையே அதிக அளவில் மீண்டும் ரத்தப்போக்கு. 'குழந்தைக்கு எதாவது ஆகியிருக்குமோஎன்கிற பயத்தில் சுஜா டாக்டரிடம் ஓட, ஸ்கேன் செய்த டாக்டர், குழந்தையின் இதயத்துடிப்பு நார்மலாக இருப்பதால், கரு நலமாக இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தைக்கு ஆபத்து இல்லை என்பது சந்தோஷம் தந்தாலும், ரத்தம் ஏன் வந்தது என்கிற கேள்வி சுஜாவை அரித்துக்கொண்டே தான் இருந்தது.

''ஒருதடவைதான, இனி ரத்தம் வராதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அடுத்தடுத்து அஞ்சு மாசம் வரைக்கும் வந்துட்டேதான் இருந்தது. எப்ப வேணாலும் வரும் என்பதால, நடக்கவே பயப்படுவேன். ஒவ்வொரு தடவையும் பயந்து டாக்டர்கிட்ட போவேன். ஒருதடவை வீக்கா இருக்கிறதா அட்மிட் பண்ணாங்க. எதுவும் பிரச்னை இல்லை, பார்த்துக்கலாம்னு டாக்டர் சொன்னாலும், எனக்கு நிம்மதியே இல்லை. குழந்தைக்கு எதாவது பிரச்னை வந்திருமோன்னு பயந்துட்டே இருந்தேன். பையன் நல்லபடியா பிறந்த பிறகுதான் நிம்மதி''  இப்போது சொல்லும்போதும்  பழைய பதற்றம் அவர் முகத்தில் தெரிந்தது.
சங்கீதாவுக்கு இரண்டு குழந்தைகள்.

இரண்டு பிரசவ காலங்களிலும் அவருக்கு ரத்தப்போக்கு இருந்தது. பயத்துடனேதான் அந்த காலகட்டத்தைக் கடந்திருக்கிறார்.  இந்தப்  பிரச்னையால் பயந்தே வேலையை விட்டவர்கள் பலர். ''வயித்துல குழந்தை இருந்தா, அப்படித்தான் கால் வீங்கும், வாந்தி எடுக்கும்... நிறைய வாந்தி எடுத்தா, பொம்பளை பிள்ளைதான்; நிறைய கீரை சாப்பிடணும்'' என கர்ப்பகால ஆலோசனைகளை அடுக்கும் முந்தைய தலைமுறைக்குக் கூட இந்த ரத்தப் பிரச்னை பற்றி  பெரிதாக எதுவும் தெரியவில்லை. கருவுற்ற பெண்ணை
விட, அம்மாவோ, பாட்டியோதான் இன்னும் பயந்து விடுகிறார்கள்.

பலர் கரு சிதைந்துவிட்டதாக தவறாகப் பதறுவதால்தான் அத்தனை கலாட்டாக்களும்!
கருவுற்ற காலத்தில் ரத்தம் ஏன் வெளியேறுகிறது, பயப்படக் கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்னையா என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார், சென்னை .வி. கல்யாணி மெடிக்கல் சென்டரின் ஓய்வு பெற்ற மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜூன். கருவுற்ற பெண்கள் பதற்றமின்றி தாய்மையை சந்தோஷமாக அனுபவிக்க டாக்டரின் விளக்கம் நிச்சயம் உதவும்.
''ரத்தப்போக்கைப் பார்த்து பயப்படத் தேவை இல்லை. அதை ஓர் அறிகுறியாக எடுத்துக்கொண்டு, உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். மிகச் சிலருக்கு கர்ப்ப காலத்தின் ஒன்பது மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். பெரும்பாலான பெண்களுக்கு,  'ஃபர்ஸ்ட் ட்ரைமெஸ்டர்என்று மருத்துவத் துறையில் சொல்லப்படும் முதல் மூன்று மாதங்களில்தான் இது ஏற்படுகிறது.'' என்கிறார் டாக்டர் கீதா.

''பயப்படக்கூடாது என்று சொன்னதும், இது சகஜமானதுஎன்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ரத்தப்போக்கின் சில அறிகுறிகளை வைத்து அது தீவிரமான பிரச்னையா, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவோம்'' என்கிறார்.

ரத்தப் போக்கு ஏன்?

கருத்தரித்த 10 முதல் 14 நாட்களுக்குள் கருமுட்டை கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளுதல் (Impalantation), கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், கருச்சிதைவு, கர்ப்பப்பைக்கு வெளியே ஃபெலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம் மற்றும் முத்துக் கர்ப்பம்... இவற்றுள் ஏதாவது ஒன்று ரத்தப்போக்குக்குக் காரணமாக இருக்கலாம். இவை தவிர, கர்ப்பப்பை வாயில் தோன்றும் சிறு கட்டிகள் (polyps) மற்றும் பெண் உறுப்பில் காயம் அல்லது வெட்டு காரணமாகவும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.  

கருவுற்ற இரு வாரங்களுக்குள் சிலருக்கு லேசான ரத்தக்கசிவு இருக்கும். சினைப்படுத்தப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் உட்புறத்தில் தன்னைப் பதித்துக்கொள்ளும்போது இவ்வாறு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில்  பலரும் கரு சிதைந்துவிட்டதாகப் பதறிப் போய் வருவார்கள். சில பெண்கள் இதை மாதவிலக்கு என்று தவறாக நினைத்து, தான் கர்ப்பமானதையே உணராமல் இருப்பதும் உண்டு.
கர்ப்பகாலத்தில், கர்ப்பப்பையின் வாய்ப்பகுதிக்கு அதிகமான ரத்தம் செல்லும். எனவே, அந்தப் பகுதி மிக மிருதுவாகவும் ரத்தம் கோத்தது போலவும் இருக்கும். அந்தப் பகுதியுடன் தொடர்பு கொள்ளும்போது (உதாரணமாக: உடல் உறவு அல்லது மருத்துவப் பரிசோதனை) சிறிதளவு ரத்தக்கசிவு ஏற்படலாம். இதுபற்றி பயப்படத் தேவை இல்லை. இது இயற்கையாகவே நின்றுவிடும்.

கருவுற்ற தொடக்கத்தில் இருந்தே ரத்தக்கசிவு இருக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, அந்தக் கர்ப்பம் அப்படியே தொடர்ந்துவிடும். ஆனால், மாதவிலக்கு நாட்களைவிட அதிகமான ரத்தப்பெருக்கு, அடிவயிற்றில் சுருட்டிப் பிடிக்கும் வலியுடன் கூடிய ரத்தப்போக்கு, மயக்கம் மற்றும் தலைசுற்றல்,  ரத்தப்போக்குடன் காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டும். டாக்டர் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலம் நிலைமையைத் தெரிந்துகொண்டு, சிகிச்சை அளிப்பார்''.

இரண்டாம், மூன்றாம் மும்மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்கு பற்றி...?

இந்தக் காலகட்டத்தில் கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் தோன்றும் சிறு கட்டிகளால் (polyps) ரத்தம் வெளியேறலாம். தாம்பத்ய உறவுக்குப் பின்னும் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இந்தச் சமயத்தில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு குறைவுதான் என்றாலும், மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி, எந்தவிதமான வலியும் இல்லாமல் சில நேரங்களில் திறந்துகொள்ள நேரும்போதும், நச்சுக்கொடி இயல்புக்கு மாறாக இருந்தாலும் ரத்தப்போக்கு இருக்கலாம். சில நேரங்களில், குறித்த நாளுக்கு முன்பே தோன்றும் பிரசவவலிகூட, முதலில் ரத்தப்போக்குடன் ஆரம்பிக்கலாம். எதுவாக இருந்தாலும், மருத்துவரிடம் உடனடியாக ஆலோசிப்பது நல்லது''.

தாய்மைக் காலம் முழுவதும் ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?

மூன்றாம் மும்மாதம் என்பது கர்ப்பகாலத்தின் கடைசிக் காலம். இந்தச் சமயத்தில் சிலருக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இது தாய், குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.

நச்சுக்கொடி விலகுதல், நச்சுக்கொடி கீழிறங்கி இடம் மாறுதல் போன்றவைதான், இந்தக் கடைசி மும்மாதங்களில் ரத்தம் வெளியேறக்் காரணம். நச்சுக்கொடி விலகும் பிரச்னை 100ல் ஒருவருக்குத்தான் ஏற்படும். நச்சுக்கொடி கீழிறங்கி, இடம் மாறும் பிரச்னை 200 பேரில் ஒருவருக்கு ஏற்படும். இவர்களுக்கு வலியின்றி ரத்தப்போக்கு இருக்கும்.

                                         


மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்குமாறு சொல்வார்கள். கட்டுங்கடங்காமல் ரத்தம் போனால், குழந்தையின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்படாமல் அறுவைசிகிச்சை செய்து எடுத்துவிடுவார்கள்.'

நச்சுக்கொடி விலகும் பிரச்னை யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

'ஏற்கெனவே கருத்தரித்தவர்கள், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன் பிரசவத்தில் நச்சுக்கொடி விலகியவர்கள், கர்ப்பகாலத்தில் மிக உயர்ந்த ரத்த அழுத்தம் உடையவர்கள்... இவர்களுக்கு  நச்சுக்கொடி விலகும் அபாயம் உள்ளது. அடிவயிற்றில் மிகவும் பலமாக அடிபட்டாலும் இவ்வாறு ஏற்படலாம். இரட்டைக் குழந்தைகள் உள்ள பெண்களுக்கும் நச்சுக்கொடி கீழிறங்கும் ஆபத்து உள்ளது.'

ரத்தப்போக்கு இருந்தால் பெட் ரெஸ்ட் அவசியமா?

மிகக் குறைந்த அளவில் ரத்தக்கசிவு இருந்தால், நிச்சயம் ஓய்வு தேவை. குறைவான, எளிய வேலைகள் மட்டும் பார்க்கலாம். ரத்தப்போக்கு கொஞ்சம் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டும். ரத்தப்போக்கு முழுவதுமாக நின்ற பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். ரத்தப்போக்கு இருக்கும்போது தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும். கடைசி மூன்று மாதங்களில் அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால், ரத்தம் கொடுக்கவும் நேரிடலாம்.''

இதற்கான சிகிச்சைகள் என்ன?
கருவில் இருக்கும் குழந்தை நார்மலாக இருந்தால், எந்தச் சிகிச்சையும் தேவை இல்லை... மேலும், பயப்படவும் தேவைஇல்லை'' என்று கர்ப்பிணிகளுக்கு ஆறுதல் தருகிறார் டாக்டர் கீதா அர்ஜூன்.
முத்துப் பிள்ளை கர்ப்பம் (Molar pregnancy):

மிக அரிதான இந்த கர்ப்பத்தில், குழந்தையே உருவாகி இருக்காது. ஆனால், கொத்துக்கொத்தாக நீர்க்கட்டிகள் கர்ப்பப்பையை நிறைத்திருக்கும். இதனால், ரத்தப்போக்கும் ஏற்படும். இந்த வகை கர்ப்பத்துக்கு அறிகுறியே ரத்தப்
போக்குதான். என்றாலும், முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ரத்தப்போக்குக்கு இது காரணமாக இருக்காது. இந்தக் கட்டிகளை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.

புற கர்ப்பம் (Ectopic pregnancy):

சில பெண்களுக்கு, கரு சரியாக கருப்பையில் பதியாமல், இயல்புக்கு மாறாக ஃபெலோப்பியன் குழாயில் பதிந்து வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை, சரியாக வளர முடியாது. இதனால், உடலுக்குள்ளேயே நிறைய ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற கர்ப்பம் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, அடிவயிற்றில் ஒருபக்கமாக வலி, மயக்கம் போன்றவை இருக்கும்.

ரத்தப் போக்கு இருப்பவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுமா?

கர்ப்பம் தரித்தவர்களில் 15 முதல் 20 சதவிகிதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. அவர்களில் பலருக்கு, முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது. எனவே முதல் மூன்று மாதங்களில் ரத்தப்போக்கு இருந்தால், அது கருச்சிதைவாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் சென்று, குழந்தையின் இதயத் துடிப்பைப் பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதயத்துடிப்பு சீராக இருந்தால், ரத்தப் போக்குக்கான காரணத்தைக் கண்டறிந்து டாக்டர் சொல்லும் சிகிச்சைகளைத் தொடர வேண்டும்.


வாழைப்பூ வைத்தியம்

கர்ப்பகால ரத்தப்போக்கை நிறுத்தவும் கட்டுப்படுத்தவும் சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறதா என்று சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.
தாய்மையடைந்த பெண்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சிறிது ரத்தப்போக்கு இருப்பது சகஜம்தான். அப்படி ரத்தப்போக்கு இருப்பவர்கள், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
உணவில் வாழைப்பூவைத் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைப்பூ கர்ப்பகாலப் பிரச்னைகள் பலவற்றுக்குச் சிறந்த மருந்து.

தாமரைத்தண்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தாமரைத் தண்டு வற்றல் இப்போது கடைகளில் கிடைக்கிறது.
மேலே சொன்ன இரண்டுக்குமே ரத்தப்போக்கு கட்டுப்படவில்லை என்றால், இம்பூரல்என்ற சித்த வைத்திய மூலிகைதான் மருந்து. ஒரு சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, இம்பூரல் கலந்த மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், பலன் கிடைக்கும்.’’
 

இனிமேல் தேவையில்லை, ப்ளீடிங்பற்றிய பயம்!  


No comments:

Post a Comment