சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Oct 2014

'கத்தி’ படம் எனக்கு ஒரு பாடம்: சொல்கிறார் நடிகர் விஜய்!




‘கத்தி படம் எனக்கு ஒரு பாடம்’ என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

 தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசுகையில், "உணவு, உடை, இருப்பிடம் என்ற அத்தியாவசிய தேவைகளில் முதன்மையாக இருக்கிற உணவு கொடுக்கிற விவசாயிகளின் பிரச்னையை எடுத்து சொல்கிற கதாபாத்திரம் தான் கத்தி படத்தில் நான் நடித்தது. உண்மையிலேயே அந்த கதாபாத்திரத்தில் நடித்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

  விவசாயிகள் படுகிற கஷ்டம், அவர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுகிறார்கள் என்பவையெல்லாம் நமக்கு தெரியும். பேப்பரில் பார்க்கிறோம். டி.வி. செய்திகளில் பார்க்கிறோம். ஆனால் இந்த படத்திலே நான் நடிக்கும் போது தான் இது ஒரு படம் என்பதை விட எனக்கு ஒரு பாடமாக தெரிந்தது. எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் சொந்த ஊரை விட்டு விட்டு வேறு ஊருக்கு போய், வெளிநாட்டுக்கு போய், கூலி வேலை செய்கிறார்கள் என்ற தகவல்களையெல்லாம் நான் தெரிந்து கொண்டேன். இதையெல்லாம் புரிந்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் இந்த சிறிய நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

 நிறைய பேர் சொல்லி நான் கேட்டு இருக்கிறேன். நம்மிடம் பசி என்று வருகிறவர்களிடம் 2 மீன் துண்டை கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிப்பதற்கு கற்றுத்தருவது மேல் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2 மீன் துண்டையும் கொடுத்து, மீன் பிடிக்க கற்றும் கொடுத்து, அதை பிடிக்கும் வலையையும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால் பசியில் இருக்கும் போது, வயிறு காலியாக இருக்கும் போது மூளை வேலை செய்யாது. சுத்தம் சோறு போடும் என்று சொல்வார்கள். இங்கே ஏழைகள் வயிறெல்லாம் சுத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் சோறு போடுவது யாரு?. இந்த மாதிரி பேசுவது, இந்த மாதிரி கேள்விகள் கேட்பதால் உங்கள் பசி தீர்ந்து விடாது. அதனால் இந்த சிறிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. இதை நாங்கள் நான்கு சுவற்றுக்குள் செய்திருக்கலாம். ஆனால் இதை நான் ஏன் உங்கள் முன்னால் செய்தேன் என்றால் இதை பார்த்து இன்னும் சில பேர் நிறைய பேருக்கு உதவி செய்வார்கள் என்ற ஒரு நம்பிக்கை.

ஒரு ஊரில் நிறைய மருத்துவமனைகள் இருந்தால் அந்த ஊரில் ஆரோக்கியம் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். அதே மாதிரி ஒரு ஊரில் அள்ளி அள்ளி கொடுத்தால் அந்த ஊரில் நிறைய ஏழைகள் இருக்கிறதா அர்த்தம். எப்போது இந்த மாதிரி நலத்திட்ட உதவிகளையே ஏற்றுக்கொள்ள ஆள் இல்லை என்ற நாள் வருகிறதோ அந்த நாள் தான் இந்தியா வல்லரசாக ஆகிற நாளாக நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.



No comments:

Post a Comment