சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jan 2016

பத்ம ஸ்ரீ விருது : பார்வையை மாற்ற வைத்த 'நாப்கின் '!

ந்தியாவின் பத்ம விருதுகள்,  பரிந்துரையின் அடிப்படையிலும் பிரபலத்தின் அடிப்படையிலுமே வழங்கப்படுகிறது என்பது பரவலான கருத்து. சில சமயங்கள் தெரிந்தோ தெரியாமலோ தக்க மனிதர்களையும் விருதுகள் சென்றடையத்தான் செய்கின்றன.   இந்த ஆண்டு கோவையை சேர்ந்த   முருகானந்தம் என்பவருக்கு  பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
சரி... இந்த முருகானந்தம் அப்படி என்ன இவர் சாதித்து விட்டார்? முருகானந்தம் தேர்வு செய்த பாதைதான் இன்று அவரை விருதுக்குரிய மனிதராக மாற்றியுள்ளது. நாப்கின்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்  குறைந்தது 20 ரூபாய் முதல் விற்கின்றன. அதற்காக அதிகளவு விளம்பரங்களும் செய்து அந்த செலவையும் நுகர்வோர் தலையில்தான் கட்டுகின்றன. 

பல ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்டதாக நாப்கின் வர்த்தகம் இருந்தாலும் இந்தியாவில் 60 சதவீத பெண்கள் நாப்கினை பயன்படுத்துவது இல்லை.  அவர்களை பொறுத்த வரை,  அது குடும்பத்திற்கு மேலும் சுமையை ஏற்றுவது போல.  பழைய துணிகளையே பயன்படுத்துகிறார்கள் என்கிற உண்மையையும் இங்கே உடைக்க வேண்டியது இருக்கிறது. 

முருகானந்தமும் ஏழ்மை  நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க  வசதியில்லை.  இந்த உலகில் சாதித்தவர்களில் பல பேர் பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள்தானே. முருகானந்தத்தால் படிக்க முடியாமல் போனாலும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வெறி மட்டும் மனதிற்குள் கனன்று கொண்டேயிருந்தது. அதுவே முருகானந்த்தை வெற்றிக்கரமான மனிதராகவும் மாற்றியுள்ளது.

ஏழை பெண்களை மனிதில் கொண்டுதான், நாப்கினை குறைந்த செலவில் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முருகானந்தம் ஈடுபட்டார். இதற்காக தனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் செலவு செய்தார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். முருகானந்தத்தின் தொழில் நுட்பத்தில் நாப்கின் தயாரிக்கும் முறை பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. சுத்தத்திலும் சுகாதாரத்திலும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு சற்றும் குறையவில்லை.
தனது தொழில்நுட்பத்தை வைத்து பணம் சம்பாதிக்கவும் முருகானந்தம் ஆசைப்படவில்லை.  தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை வாங்கவும் அவர்  முயற்சிக்கவில்லை. தனது தயாரிப்பால் ஏழை பெண்கள் பயன்பட வேண்டுமென்பதே அவரது ஒரே இலக்கு. மகளிர் அமைப்புகள், பள்ளிகளில் மூலப் பொருட்கள் வழங்கி  நாப்கின் தயாரிக்க பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 

இன்று உலகின்  21 நாடுகளில் முருகானந்தம் கண்டுபிடித்த 2500  இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, நாப்கின்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றன.சுமார் ஒரு கோடி பெண்கள், இந்த எளிய விலை நாப்கின்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஒரு பீஸ் நாப்கின் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான். 

இவரது முயற்சியை பாராட்டி,  கடந்த 2014ஆம் ஆண்டு 'டைம் ' இதழ் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக முருகானந்தத்தை தேர்வு செய்தது. டைம் இதழ் தேர்வு செய்ததில் வியப்பில்லை.ஆனால் இப்போது அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பதுதான், சரியான நபர்களை சில சமயங்களில் விருதுகளும் கூட  அடையாளம் கண்டுகொள்கின்றன என்பதை காட்டுகிறது. 

பரிந்துரை இருந்தால்தான்தான் பத்ம விருதுகள் என்கிற நிலையில், முருகானந்தம் போன்றவர்கள் அது  பற்றிய பார்வையை மாற்றத்தான் செய்கிறார்கள்!  


No comments:

Post a Comment