சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Mar 2013

பெண்ணின் மனதை தொட்டு


கடலை சுருட்டி கக்கத்தில் வைக்கலாம்
காட்டு புலியை பக்கத்தில் வைக்கலாம்
இடியை கூட பிடித்து விடலாம்
துடியிடை பெண்ணின் மனமறிய முடியாது 

என்பது தென்தமிழ் நாட்டில் பாடப்பட்டு வரும் ஒரு கிராமிய பாடல் இந்த பாடலின் கருத்துக்களை அடியொற்றி திரைபடங்களில் கூட பாடல்கள் புனையப்பட்டுள்ளன. இப்போது நாம் அந்த பாடல்களை பற்றிய ஆய்வை செய்ய போவதில்லை ஆனால் அந்த பாடலின் மைய கருத்து சொல்லுகின்ற பெண்மனதை அறிய முடியாது முடியவே முடியாது என்பதை பற்றி சிறிது சிந்திக்க போகிறோம். பெண்ணின் மனதை உண்மையாகவே அறியவே முடியாதா?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஆணை போலதான் பெண்ணும் அவள் ஒன்றும் விஷேசமான வஸ்துக்களால் உருவாக்கப்படவில்லை பெண்கள் நம்பிக்கைக்கு உகவந்தர்கள் அல்ல அவர்களை எப்போதுமே நம்பாதே என்று ஆணாதிக்க சமூகம் ஒரு போலியான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் கண்டுபிடிப்பு தான் பெண்களின் மனது ஆழமானது ரகசியங்களை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு பதுக்கி வைக்க கூடியது என்ற விளம்பரமாகும். என்று சிலர் ஆணித்தனமாக சொல்கிறார்கள். 

பெண்மனது அறிய முடியாத கண்டுபிடிக்க இயலாத ரகசிய குகை போன்றது என்றால் பெண்களிடம் ரகசியங்களை சொல்லாதே அவர்களால் அதை ரகசியமாக காப்பாற்ற இயலாது என்று ஒரு கருத்து இருக்கிறதே என்று நமக்கு கேட்க தோன்றுகிறது. மகாபாரதத்தில் குந்தியின் மகன்தான் கர்ணன் என்பது குந்தி தேவிக்கு தெரிந்த பிறகும் கர்ண வதம் நடைபெறும் கடைசி நிமிடம் வரை கூட அதை ரகசியமாக தாய் குந்திதேவி பாதுகாத்தாள் என்பதற்காக தர்மராஜன் இன்றுமுதல் பெண்களுக்கு ரகசியத்தை பாதுகாக்கும் திறனில்லாமல் போகட்டும் என்று சபித்தானாமே அது பொய்யா?

ஒருபுறம் பெண்மனது ஆழமென்ற பிரச்சாரமும் இன்னொருபுறம் பெண்களால் ரகசியங்களை காப்பாற்ற முடியாது என்ற பிரச்சாரமும் நடைபெறுகிறது. இதில் எதை நம்புவது? எது சரி? என்று நமக்கு தெரியவில்லை உண்மையில் பல நேரங்களில் பெண்கள் தானறிந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் மிக திறமையாக மறைத்து விடுவதையும் பார்க்கிறோம். தானறிந்த மிக முக்கியமான ரகசியத்தை சொல்ல கூடாத இடத்தில் சொல்லி விடுவதையும் பார்க்கிறோம். இப்படி மாறுபட்ட இரண்டு குணாதிசயங்களை பெண்களிடம் காணும் போது தான் நமக்கு குழப்பமே வருகிறது. உண்மையில் பெண்கள் மனத்திரை போடாத ஜீவன்களா? அல்லது இறுகி போன கற்கோட்டைகளா?

ஐம்பது வருடகாலம் தனது கணவனோடு இனிமையான இல்லறம் நடத்திய பல பேரன் பேத்திகளை பார்த்த ஒரு வயதான மூதாட்டி சொன்னார் நான் என் இளம் வயதில் என் அத்தை மகனை காதலித்தேன் அவரும் நானும் சுற்றாத இடமில்லை ஊருக்கு ஒதுக்குபுறமான பாறைகளிலும் மரங்களிலும் எங்கள் இருவரின் பெயர்களை எழுதிவைத்து ரசிப்பது எங்களுக்கு பிரியமான பொழுது போக்கு என்னை அவருக்கு கட்டிகொடுக்காமல் குடும்ப சண்டையால் இவருக்கு அதாவது கணவருக்கு கட்டி கொடுத்து விட்டார்கள் இந்த விஷயத்தை என் புருஷன் சாகும் வரையிலும் அவரிடம் சொன்னதே இல்லை.

விளையாட்டு தனமாகவோ விஷமமாகவோ அவரிடம் இதை சொல்லியிருந்தால் என்னை வீட்டை விட்டு துரத்தி இருப்பார் இல்லை என்றால் கொன்றே போட்டிருப்பார். எப்போதுமே நமது கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் புருஷனிடம் சொல்ல கூடாது சொன்னால் குடும்பம் நடத்த முடியாது என்று சொன்னார். அதை என் காதார கேட்டிருக்கிறேன். அந்த மூதாட்டியின் இந்த செயல் வாழ்க்கையின் எதார்த்தத்திற்கு ஏற்றது என்றாலும் ஐம்பது வருடமாக ஒரு விஷயத்தை ரகசியமாக பாதுகாக்க தெரிந்த பெண் எவ்வளவு ஆழமானவள் அவள் இதயத்திற்குள் எத்தனை ரகசியங்கள் புதைந்து கிடக்கும். என்று ஆச்சரியபட தோன்றுகிறது.

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமும்
கத்துபுனல் மீன்பதமும் கண்டாலும் - பித்தரே
கான்ஆர் தெரியல் கடவுளும் காண்பரோ
மான்ஆர் விழியார் மனம் 

என்று நீதி வெண்பா ஒரு அழகான பாடலை நமக்கு தருகிறது. இதன் பொருள் அத்தி மலர்வதை பார்த்தாலும் பார்க்கலாம் வெள்ளை நிறத்தில் காகத்தை கண்டலாமும் காணலாம் கடலுக்கடியில் நீந்தி செல்லும் மீன்களின் கால்தடத்தை கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் பெண்களின் மனதில் இருப்பதை கடவுளாலும் கண்டறிய இயலாது என்பதாகும்.

பெண்மனத்தின் ஆழத்தை காணமுடியாது என்பதெல்லாம் வெற்று பேச்சி ஒருவர்கொருவர் அன்போடு அன்யோன்யமாய் வாழ்ந்தால் கணவன் மனதில் உள்ளதை மனைவியும் மனைவியின் மனதை கணவனும் உள்ளங்கை நெல்லிக்கனி போல அறிந்து கொள்ளலாம் புரிந்தும் கொள்ளலாம். மனைவியின் மனதை அறியாதவர்கள் கூட தாயின் மனதை அறிந்து கொள்வார்கள். தாய்மனதையும் ஒரு ஆண்மகனால் அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவனை அறிவுடையவனாக ஏற்றுகொள்ள இயலாது என்று சில அனுபவசாலிகள் சொல்கிறார்கள். அதாவது பெண் மனைவியாக இருக்கும் போது புரியாதவளா இருந்தாலும் தாயாக மாறும் போது புதிராக அவள் இருப்பதில்லை என்பது இவர்களின் கூற்றாகும். 

ஆழமாக சிந்தித்து பார்த்தால் இந்த கூற்றிலும் உண்மை இருப்பது தெரியவரும். மனதை அறிய மனதின் ரகசியத்தை புரிந்துகொள்ள ஆண்பெண் என்று பேதங்கள் பார்ப்பது சரிவராது. ரகசியங்கள் என்று வரும் போது ஆணும் சரி பெண்ணும் சரி சரிநிகர் சமானமாகவே நடந்துகொள்கிறார்கள். என்று மனோதத்துவ நூல்கள் சொல்லுகின்றன இந்த கூற்றை நுண்ணிய முறையில் ஆய்வு செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் சில இருப்பது தெரியவரும்.

எந்த மனிதனும் தனது சொந்த வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்தி கொள்ள விரும்புவது இல்லை இன்ன காரியத்தால் சிக்கல்கள் உருவாகும் என்று தெரிந்து கொண்டால் அதை எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் கூட அல்லது சாதாரண விஷயமானால் கூட ரகசியமாக கட்டி பாதுகாப்பதில் சுயநல காரர்களாகவே மனிதர்கள் இருக்கிறார்கள். அதை வேளை தனக்கு எந்த வகையிலும் துன்பம் வராது பாதிப்பு வராது என்று கருதுகின்ற எதையும் அது எத்தனை பெரிய சம்பவமானாலும் அதை பாதுகாக்க மனிதர்கள் விரும்புவதில்லை தன்னை உண்மையானவர்களாக காட்டிக்கொள்ள நாலு பேர் முன்பு கூட போட்டு உடைத்து விடுவார்கள். இதை தான் நமது அனுபவத்தில் காண்கிறோம்.

எனவே பெண்களை ரகசியங்களை பாதுகாப்பவர்கள் என்று சொல்வதிலும் காக்க மாட்டார்கள் என்று சொல்வதிலும் உண்மை இருக்கிறது. தனக்கு வரும் துன்பத்தை தடுக்க கடலைவிட ஆழமாக அமைதியாக பெண் இருந்துவிடுவாள். அதே நேரம் துன்பம் வராது என்று தெரிந்தால் கடலை போலவே ஆர்பாட்டமாக ஆர்பரித்து விஷயங்களை வெளியில் கொட்டி விடுவார்கள். இது பெண்களுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் அல்ல ஆண்களுக்கும் இதுவே மிக சிறப்பாக பொருந்தி வரும். பெண் மனது எப்படி புரியாத அறிந்துகொள்ள முடியாத பாதாளமோ அதே போலவே ஆண்களும் அகல பாதளம்தான்.

ரகசியங்களை பாதுகாப்பது சரியானதா? தேவையற்றதா? என்பது இடத்தை பொறுத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் நம்பிக்கை என்பது மிகவும் கவனிக்க வேண்டியது. என் மனைவி என்னை மாற்றான் மனைவியை நோக்காதவன் என்று நம்பினால் அந்த நம்பிக்கையை காப்பாற்றி ஆகவேண்டிய பொறுப்பு எனக்குண்டு திருமணத்திற்கு முன்பு என் வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் மனைவி என்று ஒருத்தி வந்த பிறகு அவள் என்னிடம் எத்தகைய விசுவாசத்தை காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேனோ அந்த விசுவாசத்தின் படி நானும் நடந்துகொள்ள வேண்டும். இது என் மனைவிக்கும் பொருந்தும்.

சுயநலம் என்று வரும்போது ஆண்பெண் இருவருமே ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். இதில் பெண்களை மட்டும் குற்றம் கூறுவது எந்த வகையிலும் பொருந்தாது. ஆனால் ஆணாதிக்க சமூகம் காலம் காலமாக பெண்களின் மீதே சில பழிகளை சுமத்தி வருகிறது. அதன் விளைவு தான்

வெட்ட வரும் கொடுவாளை கட்டி அணைக்கலாம்
சுட்டுவிடும் நெருப்பை கூட தொட்டுவிடலாம்
பட்டுபோன மரம் கூட தளிர்த்து எழலாம்
பொட்டு வைத்த பெண்ணை நம்பி வாழாதே 

என்று பாடல்கள் பாடுவது.

 விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment