சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Mar 2013

பராசக்தி வசனம் இன்றைய சூழ்நிலைக்கு எழுதியவர் அவரேதான்.


அரசியல் பல உட்டாலக்கிடி வேலைகளைப் பார்த்து இருக்கிறது. பல டுபாக்கூர் அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த பதிவு உட்டாலக்கிடியும் அல்ல; எழுதுகிற நான் டுபாக்கூரும் அல்ல. அரசியலில்வாதிகளிடம் அன்றாடம் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு அல்லல்படுகிற சாதாரண குடிமகன்தான்.

மனிதாபிமானத்தை இழந்தேன்; மனசாட்சியைப் புதைத்தேன்; மருத்துவத்துக்காக வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதைப் பார்த்தும் மவுனம் சாதித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!

நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று! இல்லை; நிச்சயமாக இல்லை!

மனசாட்சியைப் புதைத்தேன் மனசாட்சி வேண்டாம் என்பதற்காக அல்ல; மனசாட்சியை வைத்துக்கொண்டு மலிவு விலைக்கடையில் மளிகை கூட வாங்க முடியாது என்பதற்காக!

வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதை வாளாவிருந்து பார்த்தேன்; அன்னை வேண்டாம் என்பதற்காக அல்ல! இந்த அன்னையை வரவேற்றால் வேறுசில அன்னைகள் வெகுண்டு எழுவார்களே என்பதற்காக!

உனக்கேன் இந்த கையாலாகாத்தனம்? உலகத்தில் யாருக்கும் இல்லாத
கையாலாகாத்தனம் என்று கேட்பீர்கள்!

நானே பழக்கப்பட்டுவிட்டேன்;நன்றாகப் பழக்கப்பட்டுவிட்டேன்.

சுயநலம் என்பீர்கள்- என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது.
அண்டப்புளுகர்கள் அள்ளி வழங்கும் பணத்துக்காக அவ்வப்போது வாக்குப்போட்டு
ஜனநாயகக்கடமையாற்றுகிறோமே, அதைப்போல!

என்னை சொரணைகெட்டவன் என்கிறீர்களே? இந்த சொரணைகெட்டவனின் வாழ்க்கையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவனை குப்புறப்போட்டு குமுறியவர்கள் எத்தனை, மல்லாக்கப்போட்டு மிதித்தவர்கள் எத்தனை, நிற்க வைத்து உதைத்தவர்கள் எத்தனை என்று கணக்குப் பார்க்க முடியும்.

நாங்கள் நல்லாட்சியைப் பார்த்ததில்லை; நமீதாவின் நடனத்தை நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்திருக்கிறோம். கஞ்சி குடித்ததில்லை; ஜொள்ளு வடித்திருக்கிறோம்.

கேளுங்கள் என் கதையை! எம்மை இடித்தபுளி என்று இகழ்வோரே! திட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்!

தமிழ்நாட்டிலே இந்தப்பாடாவதி மாநிலத்திலே பிறந்தவன் நான். மாநிலத்தில் ஒரு பேச்சு; மத்தியில் ஒரு பேச்சு! தமிழக அரசியல்வாதிகளின் இரட்டைவேடத்துக்கு நானென்ன விதிவிலக்கா?

தில்லி! அவர்களின் வயிறை வளர்த்தது; சிலரை ஆசியப்பணக்காரர்களின் வரிசையில் சேர்த்தது.

கனவு கண்ட தமிழகத்தைக் கண்டேன்; கண்றாவியாக! ஆம், கையாலாகாததாக!

மாநிலத்தின் பெயரோ தமிழ்நாடு! மங்களகரமான பெயர்; ஆனால் டிவியில் கூட தமிழில்லை.

நிமிர்ந்து நின்ற தமிழனின் தலை குனிந்துவிட்டது. கையிலே டாஸ்மாக் பாட்டில்; கண்ணெதிரே சினிமா போஸ்டர்! வீட்டிலே இலவச டிவி! தமிழகம் முடங்கியது; தமிழகத்தோடு நானும் முடங்கினேன்.

தமிழனுக்கு தயவு காட்டியவர் பலர். அவர்களிலே சில தறுதலைகள் அவனது தலையிலே மிளகாய் அரைத்தனர். மரத்தடியில் திருடிவிட்டு பிள்ளைகளுக்கு மாநிலத்தை வடை போல பிய்த்துக் கொடுத்து அழகு பார்த்தனர்.

கள்ளச்சாமியார்களும் தமிழனுக்குக் கருணைகாட்ட முன்வந்தனர். பிரதி உபகாரமாக பக்தைகளோடு மெத்தையிலே வித்தை காட்டினர். அதில் தலையானவன் தான் நித்தி! எங்கள் தலையிலே போட்டான் சுத்தி! முதுகிலே இறக்கினான் கத்தி! காவியின் பெயரால், அதை அணிந்த பாவியின் பெயரால்!

தமிழன் சட்டையைக் கிழித்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்காவது போயிருப்பான். ஆனால், அவனை தன் மீதே கல்லை எடுத்து எறிந்து கொள்ள வைத்தவன் அவன் தான்!

தன் வயிறு பட்டினியில் காய்வதைத் தமிழன் விரும்பவில்லை; மாதத்திற்கு நாலு சினிமா கூட பாராமல் தவிக்க விரும்பவில்லை. அவனே மனசாட்சியைக் கொன்றுவிட்டான். ஒன்றுக்கும் உதவாதத்தை உத்தரத்தில் போடுவது தமிழகத்துக்குப் புதியதல்ல: சிங்கிள் டீக்காகச் சிங்கியடித்த வட்டச்செயலாளர்கள் எல்லாம் சிகையலங்காரம் செய்ய சிங்கப்பூர் போகிறார்கள். மாடுகட்டிப் போரடித்த தமிழனுக்கு மானாட மயிலாட போரடிக்கவில்லை.இது
எப்படிக் குற்றமாகும்?

தமிழனுக்கு சொரணை வந்திருந்தால் பீஹாருக்கு ஓடிப்போய் ஐந்து வருடம், உத்திரப்பிரதேசத்துக்கு உருண்டு போய் பத்துவருடம், பாகிஸ்தானுக்கு ஓடிப்போய் பதினைந்து வருடம்இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை? அதைத் தானா எல்லாரும் விரும்புகிறீர்கள்?

பணபலம் தமிழனை மிரட்டியது; பயந்து ஓடினான்.

ஆள்பலம் மிரட்டியது; மீண்டும் ஓடினான்.

ஆன்மீகம் தமிழனை விரட்டியது.

ஓடினான், ஓடினான் டாஸ்மாக்கின் கவுன்டருக்கே ஓடினான்.

அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்; இலவசமாய் தினமும் பாட்டிலைக் கொடுத்திருக்க வேண்டும் என்று காட்டமாய்த் திட்டுபவர்கள். செய்தார்களா, வாழ விட்டார்களா எம் தமிழரை?

அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.

தமிழன்: யார் வழக்குமல்ல! அதுவும் என் வழக்குத்தான்! தமிழனைச்
சொரணைகெட்டவன் என்று எழுதுகிறவர்களுக்காக இன்னொரு சொரணைகெட்டவன் பதில் சொல்வதில் என்ன தவறு?

தமிழன் சொரணையில்லாமல் இருப்பது ஒரு குற்றம்; சொரணை வந்தாலும் வராத மாதிரி நடிப்பது ஒரு குற்றம். இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்?

தமிழனை டாஸ்மாக் வாசலில் தத்தளிக்க விட்டது யார் குற்றம்? கடையின் குற்றமா? அல்லது கடையிலே ஊசிப்போன வடையின் குற்றமா?

திரையரங்க வாசலில் தமிழனை நிறுத்தியது யார் குற்றம்? நடிக நடிகையரின் குற்றமா? அல்லது நடிக நடிகையரின் நிகழ்ச்சிகளை அன்றாடம் ஒளிபரப்பும் டிவிகளின் குற்றமா?

அரசியல் என்ற பெயரில் அப்பத்தைப் பங்குபோடும் குரங்குகளை வளர்த்தது யார் குற்றம்? குரங்கின் குற்றமா? அல்லது குரங்கு போல தாவுகிறவர்களுக்கும் கூட்டம் கூட்டமாகப் போய் ஓட்டுப்போடும் வாக்காளர்கள் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும்வரை ஹவுஸ்ஃபுல் போர்டுகளும், பீர் விலையேற்றமும் குறையப்போவதுமில்லை.

இது தான் தமிழ்நாட்டில் எந்த டாஸ்மாக் கடைக்குப் போனாலும் கிடைக்கிற மொக்கை, அலப்பறை, மப்பில் உளறுகிற தத்துவம்.

No comments:

Post a Comment