சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Dec 2015

சென்னையை மீட்கும் ரியல் ஹீரோக்கள்!

ப்படியெல்லாம் மழை பெய்யும் என  கனவுல கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் தமிழக மக்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை கபளீகரம் செய்து விட்டது இப்பெருமழை. 
உண்ண உணவின்றி, குடிக்க தண்ணீரின்றி, அழும் குழந்தைக்கு பால் வாங்க முடியாமல், ஈரமான துணியுடன் உயிரை கையில் பிடித்து யாராவது காப்பாற்ற மாட்டார்களா என ஏங்கிகொண்டிருந்த மக்களுக்கு இத்தகைய மோசமான சூழ்நிலையில் உடனடி உதவி செய்து, பல மக்களை மீட்டெடுத்து, சென்னையின் அவலங்களை உலகறியச் செய்து பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள் பலர்.  

அரசாங்க நிர்வாகம் ஸ்தம்பித்து எந்த இடத்தில் எந்த மக்களை காப்பாற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும், என்னென்ன உதவிகளை செய்யவேண்டும் என திட்டமிட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே களத்தில் குதித்து ‘நாங்க இருக்கோம்’ என மக்களை காப்பாற்யிருக்கிறார்கள் நெட்டிசன்கள். தலடா, தளபதிடா, தோனிடா என்ற சண்டை போட்டுக்கொள்வதற்கு மட்டுமே லாயக்கு , சமூகவலைத்தளங்களில் இருப்பவர்கள் வேலை வெட்டியில்லாதவர்கள் என பலர் பலவிதமான விமர்சனங்களை வைத்தாலும், துயரம் ஒன்று நேரும்போது துயர் துடைப்பது முக்கியம் என களமிறங்கி தங்களால் முடிந்த பெரும் உதவி செய்தவர்களில் சிலரை பற்றிய அறிமுகங்கள் இங்கே!
 
1.தமிழ்நாடு வெதர்மேன்  :-
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக  சென்னையின் வானிலை பற்றி கணித்து தனி பிளாக் எழுதி வருகிறார் பிரதீப் ஜான்.
ஐரோப்பிய மற்றும்  இந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் ஆகியவற்றின் துணை கொண்டும், ரேடார் மற்றும் புயல் அமைப்பை வைத்துக்  கணித்தும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரங்களிலும், அடுத்தடுத்த நாட்களிலும் எவ்வாறு மழை பெய்யும், எதனால் மழை பெய்யும்  என்பதைத் தெளிவாக பதிவிடுகிறார். குறிப்பாக டிசம்பர் 1 ஆம் தேதி முன்பே அன்றைய தினம் மிகப்பெரிய அளவில் மழை பெய்யும் என்பதையும்,  வரலாறு காணாத மழை இருக்கிறது என்றும் எச்சரித்தார் பிரதீப்.
அடுத்தடுத்த நாட்களில் மழை மெதுவாக குறையும் என்பதையும், எந்த இடங்களில் எப்படிப்பட்ட மழை இருக்கும் என்பதையும் பதிவிட்டார். இவரது பதிவை பார்த்து  பலர் தங்களது பயணங்களை முறைபடுத்திக் கொண்டனர், இரண்டு மாதத்துக்கு முன்பு சுமார் ஆயிரம் பேர் வரை தான் இவரது பதிவுகளைப் பார்த்து வந்தனர், தற்போது இவரது பதிவுகள் லட்சகணக்கானோரை சென்றடைந்து கொண்டிருக்கின்றன. சால்ஜாப்பு சொல்லாமல் உண்மை நிலவரத்தை சொல்வது இவரது பிளஸ். கடும் மழையிலும் அயாரது மழை நிலவரத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்  இந்த தமிழ்நாடு வெதர்மேன்!
https://www.facebook.com/tamilnaduweatherman/
 
2. உமா மகேஸ்வரன் : -
 மழை வெள்ளத்துக்கு நடுவே தன்னை காப்பாற்றிக்கொள்ளவே பலர் திணறி கொண்டிருக்க, சமூக வலைத்தளங்கள் மூலம் பலரை  ஒருங்கிணைத்து பல்வேறு உதவிகளைச் செய்திருக்கிறார் இவர். அதிலும் வெறுமனே  ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் தட்டுவதோடு நின்று விடாமல், களத்தில் இறங்கி, முகம் தெரிந்த, தெரியாத பல நண்பர்களை இணைத்துக் கொண்டு பல்வேறு மக்களை காப்பாற்றி இருக்கின்றார்.
இரவு, பகல் பார்க்காமல் பலருக்கு உணவுப்பொட்டலங்கள், தண்ணீர் போன்றவற்றைக்  கொடுத்து உதவியுள்ளது இவரது குழு. ஓரிரு நாட்களோடு நின்று விடாமல் தொடர்ந்து ‘மிஷன் கடலூர்’ என பெயர் வைத்து கடலூர் மக்களைக் காப்பற்றவும் பல உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்துள்ளார்.
உதவி  தேவைப்படுபவர்களின் விவரங்களை மட்டும் பதியாமல், அவர்களுக்கு சரியான உதவி கிடைக்கிறதா இல்லையா என்பது ஃபாலோ அப் செய்து அப்டேட் செய்துள்ளார்.
இதனால் பலருக்கும் குறிப்பிடத்தக்க உதவிகள் முறையாகச்  சென்று சேர்ந்தது. தன்னார்வலர்கள் குறைவாக இருக்கிறார்கள்  என்பதே இவரது கவலை. 'அஜீத் பட ஓபனிங்க்கு இருக்கும் கூட்டத்தில் பாதி பேர் ஒன்று சேர்ந்தால் கூட சென்னையை மீட்டு விடலாம். பண உதவி, பொருள் உதவி புரிய பலர் தயாராக இருக்கின்றனர்.
ஆனால் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் குறைவாக இருக்கின்றனர்’ என வருத்தபடுகிறார்.  களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ தயாராக இருக்கும் தன்னார்வலர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம்.
இவரது பேஸ்புக் பக்கத்தின் இணைப்பு : -
https://web.facebook.com/umamaheshwaran.panneerselvam
 
 3.நியாஸ் அகமது :-
ஊடகவியலாளர் நியாஸ் அகமது செய்யும் பணி மகத்தானது. தர்மபுரியில் வசிக்கும் இவர் சென்னையில் கனமழை பெய்ய ஆரம்பித்தவுடன் அன்றிரவு முழுவதும் உறங்காமல் உட்கார்ந்து உதவி தேவைபடுபவர்களை ஒருங்கிணைத்தார். தவிர சென்னை முழுவதுமுள்ள வட்டார அலுவலங்கள், எந்தெந்த பகுதி மக்கள் யாரை உதவிக்கு அழைக்க வேண்டும் என்று தகவல் சேகரித்து பட்டியலிட்டார்.
இவரது பதிவுகள் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கில் ஷேர் ஆனது. சென்னையில் வட சென்னை பகுதியில் போதிய அளவுக்கு உதவிகள் கிடைக்கவில்லை, இதைடுத்து  தர்மபுரியில் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்து சென்னை கொண்டுவந்து தன்னார்வலர்கள் மூலமாக களத்தில் இறங்கியும் உதவி செய்திருக்கிறார்.
சமூகவலைத் தளங்களில்  உள்ள பலரையும் உதவி செய்யதூண்டியதில் முக்கியப் பங்கு நியாசுக்கு உண்டு.
https://web.facebook.com/journalistniyas
 
4.chennai.org : -
டுவிட்டரில் chennai.org என்ற ஒரு அக்கவுன்ட்டை தொடங்கி முகம் தெரியாத சில நபர்கள் மிகப்பெரிய உதவி புரிந்துள்ளனர். கூகுள் டாக்ஸ் பயன்படுத்தி chennairains.org என்ற டொமைன் உருவாக்கி தகவல்களை சேகரித்துள்ளனர். சென்னையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது, அதற்கு யாரை அணுக வேண்டும் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து தருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு பகுதியிலும் எந்த டாக்டரை அணுகுவது என்பது குறித்த தகவல் பலருக்கு உபயோகமாக இருந்தது.  அதே போல சென்னையில் தங்குவதற்கு  யாருக்கு இடம் தேவைப்படுகிறது, யார் தங்குவதற்கு இடம் தர தயாராக இருக்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வைத்துள்ளனர். நிவாரண நிதி எங்கே யாரிடம் வழங்குவது உள்ளிட்ட தகவலும் அடங்கியுள்ளது. மேலும்  இந்த இணையதளம் மூலமாக தன்னர்வலாராகவும் இணையமுடியும். இந்த டொமைன்-ஐ  சரியாக பயன்படுத்தினாலே உதவிகளை ஒழுங்குமுறைபடுத்த முடியும் என்கின்றனர் நெட்டிசன்ஸ்.  குறுகிய காலத்தில் மிகப்பெரிய உதவி புரிந்த இக்குழுவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. உங்களுக்கு  உதவி தேவைப்பட்டாலும், உதவி செய்ய ஆர்வம் இருந்தாலும் உங்களுக்கு இந்த இணைப்பு உதவக்கூடும்.
வலைதள இணைப்பு : -
http://chennairains.org/
 
5.ஆர்.ஜே பாலாஜி  :-

ஆர்.ஜே பாலாஜி பற்றிய அறிமுகம் தேவையில்லை. தான் வேலை பார்க்கும் எஃப்.எம் மூலமாக பல  தன்னார்வாலர்களை ஒருங்கிணைத்தார் பாலாஜி.
மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும்  தொடர்ந்து யார், எங்கே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எங்கே உணவு தேவைப்படுகிறது, யார் உணவு வழங்க தயாராக இருக்கிறார்கள் போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.
மேலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய போர்வை, தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பல  இளைஞர்களோடு சேர்ந்து இணைந்து வாங்கி பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்தார். ஆர். ஜே.பாலாஜியின் முயற்சி காரணமாக ட்விட்டரில் சென்னையில் மழை என்பது தேசிய அளவில் டிரென்ட் ஆனது. நடிகர் சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகியோரோடும் இணைந்து  தொடர்ந்து இடைவெளியின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார் ஆர்.ஜே.பாலாஜி.   
 
6.ஷாஜகான் : -
ஷாஜகான் புதுடெல்லியில் வசிக்கிறார்.  சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பலர் பாதிக்கப்பட பல் வேறு தன்னார்வாளர்கள் சென்னைக்கு விரைந்து உதவி செய்ய முன்வந்தனர், அதே சமயம் சென்னையில் 
இருந்தும் பல மக்கள் சொந்த ஊருக்கு வேகமாக திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில் சுங்கவரி செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடிகளில் அதிகாரிகள் வற்புறுத்த மக்கள் கொதித்தெழுந்தனர். வெள்ளம், டிராஃபிக், மழை என மோசமான சூழ்நிலையில் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தபடுவதை சமூக வலைத் தளங்களில் பலர் கண்டித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் ஷாஜஹான்  பிரதமர் அலுவலகத்துக்கு தமிழ்நாட்டில் உடனடியாக சுங்கவரி வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று கடிதம் எழுதினர். இவரது முயற்சி வாயிலாக தான் இந்திய அரசு 10 நாட்களுக்கு  தமிழ்நாட்டில் சுங்க வரி வசூலிக்க கூடாது என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்ததாக சென்னைக்கு ரயில் மூலமாக 1 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கடிதம் எழுதினார்.
மத்திய அரசு இவரது கோரிக்கையை உடனடியாக ஏற்றது. மூன்றாவதாக மொபைல்  டாய்லெட்  அமைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார், ஆனால் அதை உடனடியாக நிறைவேற்றுவது சிரமம் என சொல்லியிருக்கிறது அரசு. ஆனாலும், விடாது உதவிப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார் ஷாஜாகான். 
https://web.facebook.com/shahjahanr?fref=ts
  
7.    ஷாஷான்க் ரவி : -
உதவி செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் போதும், எங்கிருந்தாலும் தக்க உதவிபுரிய முடியும் என்பதற்கு உதாரணம் ஷாஷான்க் ரவி. சென்னையில் பொறியியல் படித்து அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கும் இவருக்கு  ஐம்பதாயிரம் ஃபாலோயர்கள் ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் இருக்கிறார்கள். சென்னையில் தான் இவரது பெற்றோர்கள் வசிக்கிறார்கள்.
சென்னையில் வெள்ளம் என்றதுமே பதைபதைத்தவர் அங்கிருந்தே உதவ முனைந்தார். உதவிதேவைப்படுபவர்கள், உதவி செய்ய ஆர்வமாக இருப்பவர்கள் இருவரையும் அங்கிருந்தபடியே ஒருங்கிணைத்தார். தவிர வெள்ளம், மழை, அரசின் முடிவுகள் என தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.  எந்தெந்த இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது, எந்தெந்த சாலைகளை பயன்படுத்தலாம், எந்தெந்த பகுதிகளில் வெள்ளம் அதிகமுள்ளது   போன்றவற்றை உடனுக்குடன் பதிந்தார். இவர் மூலமாக  நூற்றுக்கணக்கில் தன்னார்வளர்கள் இணைந்தனர்.
தனக்கு இருக்கும் செல்வாக்கை எப்படி பயனுள்ளதாகப்  பயன்படுத்த முடியும் என்பதை  தற்போது நிரூபித்துள்ளார்.
இவரது பேஸ்புக் பக்க இணைப்பு  :-
https://web.facebook.com/singam.90?fref=ts
8.புஹாரி ராஜா  :-
10X10 அறையில் ஒரு மொபைல் போன், வைஃபை இணைப்பு வைத்துகொண்டு  ஓமன் நாட்டில் இருந்து இங்குள்ள தமிழ் உறவுகளுக்காக மூன்று நாட்கள் அயராது உதவிகள் செய்திருக்கிறார் புஹாரி. வாட்ஸ் அப் மூலமாக தமிழ்நாட்டில் உதவி தேவைப்படுபவர்கள், உதவி செய்ய துடிப்பவர்கள் இரு குழுக்களையும் இணைத்திருக்கிறார் புஹாரி.
அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டு தொடர்பு கொண்ட ஒவ்வொரு நபருக்கும் உதவிகள் சரியாக போய்ச்சேர்ந்ததா என்பதையும் உறுதி செய்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு கஸ்டமர்கேர் போல  செயல்பட்டுள்ளார். மீட்பு பணிகள் மட்டுமின்றி எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பொருட்கள் தேவைப்படுகிகின்றன? அவற்றை வழங்குவதற்கு யார் யார் தயாராக இருக்கிறார்கள் எனபதையும் ஒருங்கிணைத்துள்ளார். சுமார் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு கிடைப்பதற்கு ஒருங்கிணைப்பாளராகச்  செயல்பட்டுள்ளார்.
 புஹாரியை தொடர்பு கொள்ள - 9677765212 
 புகாரியின் பேஸ்புக் பக்கம் - https://web.facebook.com/buhariraja?fref=ts
 
9 .புதியவன் : -
ட்விட்டரில்  தீவிரமாய் இயங்கிவருகிறார் புதியவன்.  வெறுமனே ஹாஷ்டாக் தயாரித்து ட்வீட் போடாமல், களத்திலும் இறங்கி உதவி செய்து வருகிறார். சென்னையின் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உணவு பொருட்களை விநியோகிப்பதில் முழு கவனம் செலுத்துகிறார், தவிர தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு டீம் உருவாக்கியிருக்கிறார்.
இந்த டீமில் உள்ள ஒவ்வொரும் ஒவ்வொருவிதமான வேலைகளை எடுத்து செய்கின்றனர், இதனால் பல்வேறு விதமான உதவிகளை இக்குழுவால் செய்ய முடிந்துள்ளது. இவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் மேனேஜரிடம் ஸ்பெஷல் பர்மிஷன் கேட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு  சேவையைத்  தொடந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பல அழைப்புகள் வருகின்றன, ஆனால் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது, மேலும் பல தன்னார்வலர்கள்  இணைய வேண்டும் என்பது இவரது விருப்பம்.
 https://twitter.com/Baashhu
 
10.  ஆர்.ஜே ரஞ்சித்  :-
 தனியார் வானொலி ஒன்றில் வேலை செய்யும் ரஞ்சித் உணவு மற்றும் மருந்துகள் விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார். கொசுக்கடி, சளி, காய்ச்சல் எனப் பலரும் அவதிப் படுகின்றனர், இவர்களுக்கு தொடர்ந்து இடைவிடாது காலை முதல் இரவு வரை ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து  அங்குள்ள மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருகின்றனது இவரது குழு.
தண்ணீர் பாட்டில்கள், நாப்கின் போன்றவற்றையும் இவரது குழு  விநியோகிக்கிறார்கள்.  ஸ்டேட்டஸ் தட்டுவதை விட இவர் வீடியோ பதிவாக போடுவதால், பலருக்கு தகவல் சென்றடைகிறது. தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, நிறைய தன்னார்வலர்கள் வந்தால் நிறைய பேருக்கு உதவமுடியும் என்கிறார் ரஞ்சித்.
https://web.facebook.com/RJ.RANJITH.0303/?fref=photo
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலத்தான் இவர்கள். இன்னும் வெளியே தெரியாமல், வெளிப்படுத்திக் கொள்ளாமல் பலரும் பலப்பல உதவிகளைச் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரின் கோரிக்கையும் தன்னார்வலர்கள் போதவில்லை என்பதே. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இவர்களுக்கு கை கொடுப்போம். வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மீள தோள் கொடுப்போம்! 


No comments:

Post a Comment