சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Apr 2015

"பாலபாக்யா நகர் வீட்டில் வைத்து அடித்தார்கள்!” முத்துக்குமாரசாமி சம்பவத்தைச் சொல்லும் மர்மக் கடிதம்

ரு தற்கொலைச் சம்ப​வத்தை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இழுத்தடிக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்கத்​தானே போகி​றோம்!
நெல்லையில் வேளாண்​மைத் துறையில் பணியாற்றிய உதவி செயற்​பொறியாளர் முத்துக்​குமாரசாமி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி விசாரணை மந்தமாகப் போய்க் கொண்டு இருக்​கிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ விசா​ரணைக் கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் சூழலில், முத்துக்குமாரசாமியின் சமூகமான சைவ வேளாளர்களும் கொந்தளித்து எழுந்துள்ளனர். தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பாக பாளையங்கோட்டையில் மார்ச் 29-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசியவர்கள், 'நேர்மையான அதிகாரி முத்துக்குமாரசாமியின் மரணத்தின் பின்னணியில் இருப்பவர்களை சி.பி.சி.ஐ.டி பாதுகாக்கிறது. குற்றவாளிகள் யார் என்பது தெரிந்திருந்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால், சி.பி.ஐ விசாரணையில் மட்டுமே நியாயம் கிடைக்கும்’ என்பதை வலியுறுத்தினார்கள்.

சங்கத்தின் மாநிலத் தலைவரான காசி விஸ்வநாதன், ''முத்துக்குமாரசாமியைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களை கைதுசெய்து தண்டிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஆளும் கட்சியினர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் உண்மை வெளிவராது. சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், 2016ல் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை சைவ வேளாளர் சங்கத்தினர் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பத்தைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை'' என்றார் காட்டமாக.
அகில இந்திய ராகுல்காந்தி ரத்ததான கழகத்தின் தலைவரும் வழக்கறிஞருமான பிரம்மா, ''முத்துக்குமாரசாமியின் மரணத்தில் நிறைய மர்ம முடிச்சுகள் உள்ளன. அவர், 'தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா’ என்ற மர்மம் இன்னும் விலகவில்லை. ரயில் முன் பாய்ந்தது உண்மை என்றால், அவரது உடல் சரியாக இரண்டு துண்டுகளாகக் கிடந்தது எப்படி? குற்றவாளிகள் யார் என்பது தெரிந்திருந்தும் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவே சி.பி.சி.ஐ.டி தயங்குகிறது.
முத்துக்குமாரசாமியிடம் செல்​போனில் பேசிய​வர்கள் பட்டியலில் இருப்பவர்​களிடம்கூட இதுவரை விசாரணை நடத்தப்​படவில்லை. போனில் பேசியதை வைத்து விசாரணை நடத்த முடியாது என சி.பி.சி.ஐ.டி சொல்லி வருவதாகத் தகவல். அதனால்தான் இந்தப் பிரச்னையை குடியரசுத் தலைவரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இருக்கிறேன். சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியாரை வழக்கில் சேர்க்கக் காரணம், அவர் குற்றவாளிகளுடன் தொலைபேசியில் பேசினார் என்பதுதான். ஆனால், இந்த வழக்கில் மட்டும் போனில் தொடர்புகொண்டவர்களை இதுவரை குற்றவாளிகளாகச் சேர்க்காதது வியப்பாக இருக்கிறது.
இந்த வழக்கில் முத்துக்குமாரசாமியின் பைக் முக்கிய ஆவணம். அவரது பைக்கை மறைத்து வைத்துவிட்டு 'ஜூனியர் விகடனி’ல் செய்தி வந்த பிறகே வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். அவரோட பைக் எங்கே நின்றது? யார் வீட்டில் இருந்தது? அந்த பைக்கின் நெக் லாக் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதை உடைத்தது யார்? பைக்கை அவரது வீட்டில் விட்டுச் சென்றது யார்? வேளாண்மைத் துறையின் உயர் பொறுப்பில் இருந்தவர்களும் இருப்பவர்களும் அவரிடம் தொலைபேசியில் பேசியது என்ன? அவரது வீட்டுக்குச் சென்று, முத்துக்குமாரசாமியின் மகன்களிடம் 'குடும்ப பிரச்னையால் எனது தந்தை தற்கொலை செய்துகொண்டார்’ என எழுதித் தரச்சொல்லி வற்புறுத்தியது ஏன்? இந்தச் சம்பவத்தில் உள்ளூர் ஆளும் கட்சியினர் சிலருக்கும் தொடர்பு இருக்கும் சூழலில், அவர்களிடம் போனில் விசாரணை நடத்தும் அதிகாரிகள், நேரில் அழைத்து விசாரிக்காததன் மர்மம் என்ன? எனக் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பி இருக்கிறேன்'' என்றார் ஆவேசமாக.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சுதேசி இயக்கத்தின் தலைவரான பந்தல் ராஜா, தனது கைக்கு வந்து சேர்ந்த ஒரு மர்மக் கடிதத்தின் நகலை நம்மிடம் கொடுத்தார். டைரி பேப்பரை கிழித்து எழுதப்பட்டு இருந்த அந்தக் கடிதத்தில்... ''எனது பெயர் கணேசன். பாலபாக்யா நகரில் குடியிருந்து வருகிறேன். அன்பு சமூகத்தினருக்கு, முக்கியமான தகவல். நமது இனத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி ரயிலில் அடிபட்டு இறந்தார். அதைத் தூண்டியவர்கள் சில கொலைகாரர்கள்.  இதுதொடர்பாக பாலபாக்யா நகரில் வைத்து வாக்குவாதம் நடந்தது.
பணியாளர் நியமனம் தொடர்பாக பால​பாக்யா நகரில் உள்ள அ.தி.மு.கவைச் சேர்ந்த கேபிள் சுப்பையா என்பவரது வீட்டுக்கு முத்துக்குமாரசாமியை வரச்​சொல்லி உள்ளனர். அங்கு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவரது தலைமையில் பேச்சு​வார்த்தை நடந்தது. அப்போது உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் இருந்துள்ளனர். அப்போது அவர்கள், 'பணம் வாங்காமல் பணி நியமனம் செய்ததால் முத்துக்குமாரசாமிதான் பணம் தர வேண்டும்’ என வலியுறுத்தினர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஓர் அ.தி.மு.க பிரமுகர், முத்துக்குமாரசாமியை அடித்தார். அதனால் ஏற்பட்ட மனவேதனையில் அவர் அங்கிருந்து சென்று அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தைப் பார்த்ததும் கேபிள் சுப்பையாவைத் தொடர்பு கொண்டோம்.

''அ.தி.மு.க-வில் நெல்லை மாவட்ட விவசாய அணி பொருளாளராக இருக்கிறேன். எனக்கு, முத்துக்குமாரசாமி கறுப்பா, சிவப்பா என்றே தெரியாது. நெல்லையில் இருக்கும் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர், என்னை வீழ்த்துவதற்காக இப்படி ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அதிகாரியை வீட்டுக்கு வரச்சொல்லி மிரட்டும் அளவுக்கு நான் செல்வாக்கு படைத்தவன் அல்ல. சாதாரணத் தொண்டன்தான். இந்த வழக்கு யாரை நோக்கிப் போகப் போகிறது என்பது உண்மையை அறிந்தவர்களுக்குத் தெரியும். அதை திசை திருப்புவதற்காகவே என்னை இந்தப் பிரச்னையில் சேர்த்து முடிச்சுப் போடுகிறார்கள். இந்த மொட்டைக் கடிதங்களை இரண்டு மூன்று பேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மைக் குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் இவர்களும் இதில் சிக்குவார்கள்' என்று சொன்னார்.
யார் இந்த நபர்? அந்த நபரையும் பத்திரிகைகள்​தான் கண்டுபிடித்துத் தர வேண்டுமா?


No comments:

Post a Comment